திங்கள், 26 மார்ச், 2018

எது கடவுள்

இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை ஏதேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ அதில் நான் திருப்தியடைகிறேன். நேர்மையற்ற பக்தியை நான் ஏற்பதில்லை''இது பகவத்கீதையில் கிருஷ்ணன். 
இவ்வளவு தான் இறைவன் வேண்டுவது. இதுவும் கூட அலை பாய்ந்து கொண்டிருக்கும் நமது மனசை திருப்தி அடையச் செய்யத் தான். இதை எல்லாம் கொடுத்து தான் இறையை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல. இறையே - இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவையும், இவை கடந்தவையும் தான். இந்த பிரபஞ்சத்திலுள்ள உயிரினம் எல்லாமும், உயிரினம் அல்லாதவையும் தான் இறை. எல்லா உயர்திணையும், எல்லா அஃறிணையும் இறை தான். எந்த திணையும் கடந்தவை தான் இறை.
எது கடவுள்? எது இறை? எது சாமி? எது தெய்வம்? எல்லாமே இறை தான். இதை எப்படி உணர்வது? எப்படியும் உணரலாம். எந்த வழியில் உணர்வது? எந்த வழியிலும் உணரலாம். அல்லது ''சும்மா இரு... சொல் அற...'' என்றும் உணரலாம்.
''அலப்பறை'' என்ற நவீனத் தமிழ் வார்த்தைக்கு எதிரான வார்த்தை ''சும்மா இரு...'' ''ஓட்டை வாய்'' என்ற வார்த்தைக்கு எதிரான வார்த்தை ''சொல் அற...'' வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே மாறாதது. இறையை உணரும் வழிகளும், வழிபாட்டு முறைகளும் காலம் காலமாக மாறுகிறது.
கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும்.என்னஅது? 
அலப்பறை அதிகமாகி இருக்கிறது. இறையோடு தொடர்புடைய அலப்பறைகளைப் பார்க்கும் சமயத்தில் சிரிப்பு தான் வருகிறது.
முக்கியமான மையமான உயிர்த்தன்மையை கைவிட்டு, ஜிகினா பளபளப்பைக் கொண்டாடும் குணத்துக்கு நாம் மாறி வருகிறோம். இந்திரியத் துறவு என்பதை வாழ்வியலாக கொள்ளாதவர்களை, சிறந்த துறவி என்று கொண்டாடுகிறோம்.
வார்த்தைகளை கடந்து மவுனத்துக்குள் மூழ்காமல், வண்டி வண்டியாக நுரைக்க நுரைக்க பேசுபவர்களை தெய்வமாகவே கொண்டாடுகிறோம்.
பொது வெளியிலும், வீட்டிலும் பூஜை, புனஸ்காரம் என்று வந்து விட்டால் கூடவே சேர்ந்து பெண்களுக்கு மாரடைப்பும் வந்து விடுகிறது. காரணம் - பண்பாடு, சம்பிரதாயம், பழக்கம், வழக்கம், பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களும் அவர்களுக்கு கட்டமைக்கப்பட்டுள்ள கடமைகளும் மூச்சடைக்க வைக்கின்றன.
ஏதாவதொரு கொழுகொம்பு (துணை) கிடைக்காதா அதை பற்றிக் கொண்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டு உயிர்க்கடலினை கடந்து விட மாட்டோமா 
என்றெல்லாம் பரிதவிப்பு பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இது தவிர அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இல்லற ஆன்மிக கடமைகளும் அதிகமாக இருக்கிறது.
பண்டிகை நாளில் வீட்டு பூஜைக்கு கணவர் குளித்து முடித்து வரும் போது, சகலத்தையும் ஆயத்தமாக வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு தான்.
கைக்கு எட்டும் தூரத்தில் தீப்பெட்டியை வைக்கவில்லை. வாழைப்பழம் வைக்க வில்லை. பூ வைக்கவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு பட்டியல் நீளும். வசவுகள் கேட்கும் போது அவளுக்குள் பொங்கும் ரவுத்திரத்தில் சாமிகள் எல்லோரையும் திட்டித் தீர்ப்பாள் மனசுக்குள்.இத்தனையும் கூலிக்காரியாக அவள் செய்வாள். அவன் நீட்டி வளைத்து, உடல் வளையாமல் பூஜை செய்து முடிப்பான். அவளை அநாகரிகமாக திட்டித் தீர்த்த வாயால் - மந்திரம் சொல்லி பக்தி செய்தால் சாமி மயங்குமா? சாமிகள் அருள் தருமா? 
அப்படியே செய்தால் அது சாமி தானா? சாமிக்கும் அடுக்குமா? சாமிக்கு தர்மம் தானா? இந்தக் கேள்விகள் அத்தனையும் காற்றில் மெல்லிய புலம்பலாக கரைந்திருக்கின்றன. 
வீட்டின் பூஜையில் அவள் எடுபிடி பூஜை செய்வாள். ஆஸ்ரமத்தின் பூஜையில் அவள் எடுபிடி சேவை செய்வாள். 
கோயிலிலும் அவள் எடுபிடி சேவை செய்வாள். ஆனால் எல்லா இடத்திலுமே அவள் இரண்டாம் தர, மூன்றாம் தர பிரஜையாக இருக்கிறாள். ஆனாலும் அவளைக் கொண்டாடுவது கிடையாது. அவளை மதிப்பது கிடையாது. அவள் ஒதுக்கப்பட்ட மனுஷியாகவே கிடக்கிறாள்.
இந்த சனாதனக் கோபங்கள் கொப்பளிக்கும் நாட்களில் நான் தேடிச் செல்லும் அம்மை, மேல்மருவத்தூர் அன்னை. சிறுவயதில் பாவாடை சட்டை பருவத்தில் சென்ற போது அவளும் சிறிய பீடத்தில் இருந்தாள். ஆனால் அதே தீட்சண்யம், அதே தாய்மைக் கனிவு, அதே பனிக் குளுமை இதெல்லாம் அப்போதும் உணர்ந்தேன். சின்னஞ் சிறுமியாக கண்களை விரித்துப் பார்த்த அதே மேல்மருவத்தூர் அன்னை இப்போது விஸ்வரூபம் 
எடுத்திருக்கிறாள்.
அந்த திருக்கோயிலின் இன்னுமொரு ஆத்மார்த்தமான புனிதம் - பெண்ணுக்குத் தரப்படும் முதன்மை. பெண்ணுக்கு தரப்படும் கவுரவம். சமூக மரியாதை பெண்ணுக்கு உயர்வாகத் தரப்படும் பீடம் மேல்மருவத்தூர். பெண்ணை தெய்வமாக கொண்டாடப்படும் சமூகத்தில், பெண்ணுக்கு கோயிலில் சுதந்திரம் கிடையாது. உடலிலேயே கருவறை சுமக்கும் பெண்ணுக்கு கோயிலில் கருவறைக்கு செல்லும் சுதந்திரம் கிடையாது. மேல்மருவத்தூரில் தெய்வமும் பெண் தான்.
பூஜாரியும் பெண் தான்.
ஆண் சனாதனம் நொறுங்கும் இடம் மேல்மருவத்தூர். உயர்வு, தாழ்வு, தீண்டத் தகுந்தவர், தீண்டத் தகாதவர், ஏழை, பணக்காரர், எந்த விதமான பாகுபாடும் 
இல்லாத நீதிக்கோயில். 
பெண்மைக்கோயில். 
உண்மைக்கோயில் 
மேல்மருவத்தூர்.
வெறும் எலுமிச்சம்பழம் போதும் அம்மைக்கு. வேறெந்த ஆடம்பரமும் வேண்டாம் இந்த செவ்வாடை தேவிக்கு. எத்தனை முறை அவளின் பிரகாரம் சுற்றி 
வந்திருப்பேன் என்பதான கணக்கு ஏதுமில்லை. அவளின் அருள், அவளின் கருணை, அவளின் புன்னகை என்னைக் கனிவோடு வழிநடத்துகிறது. அவளுக்கு நான் வேறேதும் கொடுத்ததில்லை. என் அன்பு, நேசம், பாசம், பக்தி தவிர. இது மட்டுமே என் இருப்பில் உள்ளது. அதனால் நான் அவளின் இருப்பில் உள்ளேன்.
கோயில்கள் தெய்வத்தின் பீடங்களாகவும் இருக்க வேண்டும். அது போன்று நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், எளிமை இதன் பீடமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் மேல்மருவத்தூர் அம்மை திருக்கோயிலின் புனித வெப்பம் - சனாதனங்கள் பொசுங்கும் அனலின் வெப்பம். அந்த வெப்பம் தான் சூரியனுக்கும் தாயாகும் வெப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக