மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். மனைவி மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழப்போகும் வீடு அமைவதும்கூட இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். தெற்கு வீடு என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று ஒதுக்கிவிடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட நாம், அப்படி தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீட்டை ஒதுக்குவது சரிதானா என்று யோகஶ்ரீ வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியிடம் கேட்டோம்.
''தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், 'சிம்ம கர்ப்ப மனைகள்' என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன.
பல பெரிய தொழிலதிபர்களின் தொழிற்சாலைகள், தெற்குப் பார்த்த மனைகளாக அமைந்துள்ளன என்பது பலரும் அறியாத தகவல்களாகும். இத்தனைக்கும் பலராலும் கைவிடப்பட்ட நிறுவனங்களாகக் கூட அவை இருக்கும். இவர்கள்தான் தொழில் புரட்சியாளர்களாகவும் திகழ்வார்கள்.
அதேவேளையில், வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான்.
இதே போல் வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் தெற்கு மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.
தெற்குமனை, என்பது எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்துமா? என்று கேட்டால், நிச்சயம் பொருந்தாது. தெற்குப் பார்த்த மனையானது, ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகமுள்ள மனையாகின்றது.
இந்த ராசிக்காரர்கள் தெற்குமனைகளைத் தாராளமாக விலைக்கு வாங்கிக் கட்டடம் கட்டலாம். இதே போல் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களும் இத்தகைய மனைகளில் வீடு கட்டி குடியேறலாம்.
தாய்க்குப் பின் தாரம் என் பது நமது கிராமப்புறங்களில் உள்ள பழமொழியாகும். அதனால், தாயாரின் ராசி, லக்னப்படியோ, மனைவியின் லக்னப்படியோ வீடுகளை அமைப்பது நல்லது. ஏனென்றால், நாம் எங்குக் குடியிருந்தாலும் அவரவரது வாழ்க்கைத்துணையின் லக்னப்படியே வீடுகளைத்தேர்வு செய்யவேண்டும். தெற்குப் பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது வீட்டை எந்த வகையில் கட்டமைக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
சமையலறை - தென்கிழக்கு (அக்னி பாகம்), வடமேற்கு (வாயுவியம்)
பூஜை அறை - வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை - தென் மேற்கு (நைருதி ), மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) - நைருதி நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை - தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி (ஸம்ப்) - வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.
தெற்கு வாசல் அமைந்த மனைகள், வீடுகளுக்கு வாஸ்து விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் மேற்குப் பார்த்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் சம்பந்தம் செய்யக்கூடாது. மேற்குக்கும் தெற்குக்கும் ஆகாது. தேவையற்ற வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்குத் தெற்குப் பார்த்த வாசலும் தெற்குப் பார்த்த மனைகளும் யோகம் தரும்.
Very useful Anna...
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு