திங்கள், 14 மே, 2018

யோனி பொருத்தம் என்றால்

முதலில் யோனி என்றால் என்ன? உடற்கூறு, தாம்பத்யம் பற்றி முழுமையாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். புதிய தலைமுறை உருவாக இந்த யோனி மிகவும் முக்கியம்.
பெண்ணின் அந்தரங்கமே “யோனி”. இதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்பதே ஜோதிட விதி. ஜோதிட சாஸ்திரம்.
ஏன் இதை ஆணுக்குப் பார்க்கக்கூடாது? என்ன செய்ய! ஜோதிடம் கூறும் விதிமுறை அப்படி.
பெண்ணுக்குத்தான் ஆணின் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்.
ஆம், பெண்ணுக்குதான் ஆணின் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.
ஆணுக்கு பெண்ணின் ஜாதகம் பார்க்கக் கூடாது.
இதுல என்னங்க இருக்கு ரெண்டும் ஒண்ணுதானே...என்பவர்களுக்கு,
பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 2 என வைத்துக்கொள்வோம். ஆனால் ஆணின் நட்சத்திரத்திற்கு அது 27 வது நட்சத்திரமாக வரும். இப்போது வித்தியாசம் புரிகிறது அல்லவா!
சரி, இப்போது யோனி பொருத்தம் ஏன் பார்க்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
“பசி வர பத்தும் பறந்து போகும்” - இது பழமொழி. நாம் நினைப்பதுபோல் இது வெறும் வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடற்பசிக்கும் சேர்த்துத்தான் இது சொல்லப்பட்டிருக்கிறது.
ஆமாம்... நிறையாத வயிறு, நிறைவில்லாத மனம், திரும்பக் கேட்காத கடன், இறைக்காத கிணறு, சுரக்காத மடி, களை எடுக்காத வயல், கவனிக்கப்படாத பிள்ளை இவை அனைத்தும் பாழாகும் என்பது முன்னோர் வாக்கு.
சந்ததியை உருவாக்க முடியாதவர்கள், வாழ்க்கையானது விவாகரத்தில்தான் வந்து நிற்கும்.
சரி என்னதான் தீர்வு?
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
அஸ்வினி:- ஆண் குதிரை
பரணி:- ஆண் யானை
கார்த்திகை:- பெண் ஆடு
ரோகிணி:- ஆண் நாகம்
மிருகசீரிடம்:- பெண் சாரை
திருவாதிரை:- ஆண் நாய்
புனர்பூசம்:- பெண் பூனை
பூசம்:- ஆண் ஆடு
ஆயில்யம்:- ஆண் பூனை
மகம்:- ஆண் எலி
பூரம்:- பெண் எலி
உத்திரம்:- பெண் எருது
அஸ்தம்:- பெண் எருமை
சித்திரை:- பெண் புலி
சுவாதி:- ஆண் எருமை
விசாகம்:- ஆண் புலி
கேட்டை :- ஆண் மான்
மூலம்:- பெண் நாய்
பூராடம்:- ஆண் குரங்கு
உத்ராடம்:- கீரி,மலட்டு பசு
திருவோணம்:- பெண் குரங்கு
அவிட்டம்:-பெண் சிங்கம்
சதயம்:- பெண் குதிரை
பூரட்டாதி:- ஆண் சிங்கம்
உத்ரட்டாதி:- பெண் பசு
ரேவதி:- பெண் யானை
இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன்.
தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்
அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம்.
சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்?
சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும்.
இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜுயோனி, கணம், இம்மூன்றும் மிகமிகமுக்கியம்.
ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண்யோனியும் ... மிக அற்புதம்
பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண்யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்
எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக