திங்கள், 9 ஏப்ரல், 2018

சித்திரை மாதம்

*சித்திரை சிறப்புகள்*
Google.com/+Bharathegopu
சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது.

சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.

*தமிழ் புத்தாண்டு*
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோவில்களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர்.

மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.

கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

*சித்திரை விசு*
பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

*வசந்த நவராத்தி*
நவராத்திரி என்பது உலகைக் காக்கும் அன்னையை விரத முறைகள் மேற்கொண்டு வழிபடக்கூடிய நாட்களைக் குறிக்கும்.

பொதுவாக வருடத்தில் புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஆடியில் ஆசாட நவராத்திரி, தையில் சியாமளா நவராத்திரி, சித்திரையில் வசந்த நவராத்திரி நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றுள் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமானவை ஆகும்.

சாராதா நவராத்திரி வழிபாடு போகத்தையும், வசந்த நவராத்திரி வழிபாடு யோகத்தையும் வழங்கிறது.

வசந்த நவராத்திரியானது பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்பட்டு வளர்பிறை நவமி வரை மொத்தம் ஒன்பது நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் அடுத்த பௌர்ணமி வரை மொத்தம் பதினைந்து நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை மொத்தம் நாற்பத்தைந்து நாட்களாகவும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் வழிபாடு மேற்கொள்ள உலக நன்மையும், பதினைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் வரங்களும், நாற்பத்தைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

பெரும்பாலும் இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்இந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

*சித்ரா பவுர்ணமி*
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளரும் ஆகிய சித்திர குப்தன் என்பவருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும் அன்னதானம் செய்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
ஆறு,குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்ரா பௌர்ணமி அன்று சோழர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோவிலில் அன்னம்தானம் செய்வதை வழக்கில் கொண்டிருந்தனர் என்பதை திருச்சி மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*ராமநவமி*
ராமநவமி என்பது திருமாலின் பத்துஅவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமனின் பிறந்த நாளைக் குறித்து கொண்டாடப்படும் விழாவாகும்.

இராமன் பங்குனி அமாவசையை அடுத்த வளர்பிறை நவமியில் பிறந்தாகக் கருதப்பட்டு இவ்விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை கடைப்பிடித்து சாதாரண மனிதனாக வாழ்ந்து எல்லோருக்கும் முன்னுதாரமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான் ஆவார்.

எனவே ராமநவமி அன்று  விரதம் மேற்கொண்டு இராமபிரானை வழிபட, நல்ல நெறியில் வாழ்க்கை முறை அமைந்து வாழ்வின் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

அன்றைய தினம் முதல் ராம மந்திரம் சொல்லத் தொடங்கினால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.

*மத்ஸ்ய ஜெயந்தி*
திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) நிகழ்ந்தது. எனவே ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமான மச்ச மூர்த்தியை வழிபட வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.

"சித்திரைத் திருவிழா*
சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர்.

பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருகல்யாணம் நடைபெறுகிறது. பதினொன்றாம் நாள் தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

*மீனாட்சி சுந்தரேஸ்வரர்*
சித்திரை பௌர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. வைகைக்கு வரும் அழகரை வரவேற்கும் எதிர்சேவையும், ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியும், சேதுபதி மண்டகப்படியில் நடைபெறும் பூப்பல்லக்கும் சிறப்பு வாய்ந்தவை.

*ஆற்றில் இறங்கும் அழகர்*
உலகிலே அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா என்ற சிறப்பினை சித்திரைத் திருவிழா பெறுவது குறிப்பிடத்தக்கது.

*அட்சய திருதியை*
அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும்.

அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும்.

பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான்.

அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவுதானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள் அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
*காமதா ஏகாதசி*

சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருமாலை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் எல்லா நல்ல விருப்பங்களும் நிறைவேறும்.

இவ்விரத முறையைப் பின்பற்றி லலிதன் என்னும் கந்தர்வன் சாபத்தினால் பெற்ற அரக்க உருவத்தில் இருந்து மீண்டும் கந்தர்வ வடிவம் பெற்றான்.
*பாபமோசனிகா ஏகாதசி*

சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

*பைரவர் விரதம்*

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரத முறை மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.
*லட்சுமி பூஜை*

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும்.

சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

இரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தம். உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவிகிதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ (Silent killer) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்கிறார்கள். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான்  ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம்  120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு. இதில் 120  என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure).  அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம், இதில் 120 என்பது சுருங்கழுத்தம்; 80 என்பது விரிவழுத்தம். ஆனால், இது எல்லோருக்குமே சொல்லி வைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை  உள்ள ரத்த அழுத்தத்தை `நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை  ‘உயர் ரத்த அழுத்தம்’ என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக்  ‘குறை ரத்த அழுத்தம்’ என்றும் சொல்கிறது.

குறை ரத்த அழுத்தம் 

குறை ரத்த அழுத்தத்தில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத்  ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.  ஒருவருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது டயஸ்டாலிக் அழுத்தம் 60க்குக் குறைவாகவோ இருந்தால், அவருக்கு இவ்வகை குறை ரத்த அழுத்தம் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அல்லது சிஸ்டாலிக் அழுத்தம் 115க்கு மேல் இருந்து டயஸ்டாலிக் அழுத்தம் 50க்குக் குறைவாக இருந்தால் அப்போதும் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் எதுவும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைமையில் அவசியம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து நேரும்.

ரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது. 

யாருக்கு இது வருகிறது?

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

தலைக்கனம், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்?

1. கர்ப்பம்: கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. என்றாலும், இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.

2. நீரிழப்பு: காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும். 

3. நோய்கள்: இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.

4. விபத்துகள்: வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

5. ஹார்மோன் கோளாறுகள்: தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

6. ரத்தம் இழப்பு: விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

7. தீவிர நோய்த்தொற்று: சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.

8. ஒவ்வாமை: மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.

9. சத்துக்குறைவு: ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.

10. மருந்துகள்: சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் 
குறையலாம்.

11. ரத்த அழுத்த மாத்திரைகள்: உயர் ரத்த அழுத்தநோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்

12. அதிர்ச்சி நிலை: இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.

இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்

சிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

உணவுக்குப் பின் குறை ரத்த அழுத்தம்

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை  சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.

பரிசோதனைகள்

குறை ரத்த அழுத்த நோய்க்கு முதல்முறையாக மருத்துவரிடம் செல்லும்போது வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரெட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேஜை பரிசோதனை (Tilt-table Test)  தேவைப்படும். இவற்றின் மூலம் குறை ரத்த அழுத்தம் நோய்க்குக் காரணம் தெரிந்து சரியான சிகிச்சையை  தொடங்க முடியும். 

சிகிச்சை என்ன?
    
* அடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது.
* சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
* குறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.

பொதுவான யோசனைகள்
    
* குறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
* நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள்.
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது.
* வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையக்கூடாது; விளையாடக் கூடாது. 
* கடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
* சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
* ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
* புகைப்பிடிக்காதீர்கள்.
* மது அருந்தாதீர்கள்.
* போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
* தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
* படுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள்.
* எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். 
* எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம். 
* படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. 
* படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
* தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
* உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
* அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும்.
* வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள். 
* இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
* அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
* ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
* மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

சனி, 7 ஏப்ரல், 2018

ஆஸ்துமா


ஆஸ்துமா

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கவிடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை.

பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்!

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது.

ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவு வகைகள்:

பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.

வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

புகை – பெரிய பகை!

ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்து மாவைத் தூண்டுகிற காரணி.

மூச்சுப்பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.

என்ன சிகிச்சை?

‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன்பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத் திணறல் உடனடியாக கட்டுப்படும்.

ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் எதற்கு ஒவ்வாமை என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஜோதிடம் என்பது

காலம்காலமாக விளக்கிச் சொல்லாமல் எளிய ஜனங்களுக்கு எட்டாக் கனியாகவே போய்விட்ட இந்த மாபெரும் கலையை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தினால் இன்னும் மிகுதியான மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது உறுதியான ஒன்று.

ஏன்? எதற்கு? எப்படி? என்று தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ள தேவையும் இல்லாமல் அல்லது தெளிவாக சொல்வதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் ஜோதிடர்களும், ஜோதிட ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். அதேநேரத்தில் ஜோதிடத்தின் அத்தனை சூட்சும அமைப்புகளையும், விதிகளையும் பாமரனுக்கும் புரியும்படி விளக்கவே முடியாது.

ஜோதிடமே கடுமையான முரண்பாடுகளைக் கொண்டதுதான். பல நேரங்களில் இங்கே விதியைவிட விதிவிலக்கே அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். உண்மையில் ஜோதிடத்தை புரிந்து கொள்பவரிடம்தான் குறை இருக்கிறதே தவிர இம்மியளவு குறை கூட இந்த மகா அற்புதக் கலையில் இல்லை.

ஜோதிடரைப் பற்றியும், ஜோதிடத்தையும் விளக்குவதற்கு இங்கே ஏராளமான சம்பவங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. பதினெட்டாம் பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிடஞானி அரசனிடம் சொல்ல, விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால்தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில் மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித்தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் ஜெயித்து வெறும் மிகிரர் “வராஹமிகிரர்” ஆனதும் ஜோதிடத்தால்தான்.

அதே பதினெட்டாம் பிறந்த நாளில் தன் மகன் இறந்து போவான் என்று வேறொரு ஜோதிடர் கணிக்கிறார். ஆனால் இந்த அமைப்பிற்கு குருவின் பார்வை இருப்பதால் மகனின் மரணம் இருக்காது என்று உறுதி செய்கிறார். கணிப்புத் தவறி மகன் பதினெட்டாம் பிறந்த நாளில் மரித்துப் போகிறான். அதிர்ந்து போன ஜோதிடர் இந்த அற்புதக் கலையே பொய் என்று மகனின் சிதையிலேயே அனைத்து ஓலைச்சுவடிகளையும் எரிக்கப் போகும் நிலையில் முக்காலமும் அறிந்த ஞானி நாரதர் வந்து தடுக்கிறார்.

மகன் ஜாதகத்தில் குருபார்வை இருக்கிறது என்று கணித்தாயே, கிரகங்களுக்கும் மனிதர்களைப் போலவே விழிப்பது, காலைக்கடன் கழிப்பது, போஜனம், தாம்பூலம், தூக்கம் போன்ற நித்யகர்மாக்கள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே அறிவாயா எனக் கேட்டு, மகன் ஜாதகத்தில் குருபார்வை உள்ளது என்று நீ கணித்த போது குருவின் நித்யகர்மா என்ன என்பதை பார்த்தாயா என்று கேட்கிறார்.

மீண்டும் கணித்துப் பார்க்கையில் குருவின் அப்போதைய நித்ய கர்மா தூங்குவது என வருகிறது. தூங்கும் குருவிற்கு ஏது பார்வை? தவறை உன்பேரில் வைத்துக் கொண்டு ஓலைச்சுவடிகளை ஏன் எரிக்கிறாய் என்று நாரத மகரிஷி கேட்பதாக இன்னொரு கதை சொல்கிறது.

உண்மையில் குருடர்கள் யானையை பார்ப்பதுதான் ஜோதிட சாஸ்திரமும். யானையின் முன்னங்காலை மட்டும் தடவிப் பார்க்கும் ஜோதிடர் யானை தூண் போல இருக்கும் என்கிறார். துதிக்கையைப் பார்ப்பவர் உருளையைப் போன்றது என்கிறார். கடைநிலையில் இருக்கும் ஜோதிடர் வாலின் நுனி முடியை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை சிறு குச்சியைப் போல இருக்கும் என்கிறார். உண்மையில் இந்த யானையை முழுதாகப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.

பலன் சொல்வதைத் தவிர்த்து விட்டால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியலை சார்ந்த ஒன்றுதான் என்பதை பகுத்தறிவாளர்கள் கூட ஒத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய பகுத்தறிவாளராக அறியப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது “ஜோதிடத்தில் எதிர்காலம் பற்றிய ஏதோ ஒன்று ஒளிந்து கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து பயமுறுத்தி பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கும் கலையாகி விட்டதால்தான் என் போன்றவர்கள் எதிர்க்கிறோம். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் இக் கலையை ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்ட, நல்வழிகாட்ட பயன்படுத்துவதை வரவேற்கவே செய்கிறேன்” என்று சொன்னார்.

ஜோதிடத்தில் கொடுக்கப்படும் கிரகநிலைகள் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட வானியல் உண்மைகள்தான். இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் கண்டுபிடித்த பஞ்சாங்கத்தின் மேல்தான் இன்றைய நவீன வானவியல் அமர்ந்திருக்கிறது. நாசா உள்ளிட்ட நவீன விஞ்ஞானிகள் இன்றைய கிரக நிலைகளை துல்லியமாக கணிக்க உதவியவை. அன்றைக்கு நமது தெய்வாம்சம் பொருந்திய ஜோதிட ஞானிகள் வெறும் கண்ணால் பார்த்துச் சொன்ன அடிப்படை கிரக நிலைகள்தான்.

ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் கிரகங்கள் அனைத்தும் நவீன விஞ்ஞானத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டவை. இன்றைய விஞ்ஞானம் கடந்த ஐநூறு ஆண்டுகளாக செழித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் வானவியலின் அடிப்படையே ஜோதிட சாஸ்திரம்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்.

உலகின் மாபெரும் விஞ்ஞானியான சர். ஐசக் நியூட்டனின் அறையில் ஜோதிடப் புத்தகங்கள் நிரம்பி இருப்பதைப் பார்த்த அவரது மாணவர் ஹாலி “விஞ்ஞானியின் அறையில் ஜோதிட புத்தகங்களா?” என்று கேட்டதற்கு “ஜோதிடத்தைப் பற்றி நான் அறிந்திருப்பதால் வைத்திருக்கிறேன். அறியாததால் நீ கேட்கிறாய்” என்று பதில் சொன்னார். இவரைப் போன்ற விஞ்ஞானிகள் இன்றும் இருக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கங்களின் ஆதரவினால் கிடைக்கும் முறையான ஆராய்ச்சியின் மூலம் அறிவியல் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், நவீன விஞ்ஞானத்தின் ஆதாரக் கலையான ஜோதிடம் மட்டும் இன்றுவரை மிகப் பெரிய ஆராய்ச்சிகள் இன்றி சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகிறது. வானியல் சாஸ்திரத்திற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் ஜோதிடத்திற்கும் கொடுக்கப்பட்டிருந்தால் விஞ்ஞானம் வேறுவகையில் எப்போதோ பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டு பிடித்திருக்குமோ என்னவோ?

நவீன விஞ்ஞானிகள் இன்று வான சாஸ்திரத்தின் குறியீடுகளாக பயன்படுத்தும் அடிப்படை விஷயங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தையும் கண்டுபிடித்தது அன்றைய ஜோதிடம்தானே தவிர நவீன விஞ்ஞானம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜோதிடம்தான் விஞ்ஞானமாக கருதப்பட்டு வந்தது.

பூமியில் இருந்து வானத்தை பார்க்கும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள விண்வெளியை பனிரெண்டு சமமாக பங்குகளாக, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளாக பிரித்தது சூரிய, சந்திர, பூமியின் இயக்கங்களை வைத்துத்தான். இந்த மூன்றும்தான் நம்மைச் சுற்றியுள்ள வானின் ஆதாரப் புள்ளிகள். பூமியில் இருந்து பார்ப்பதால் நமக்கு சூரியனும், சந்திரனும் மையப் புள்ளிகள் ஆகின.

சந்திரனின் வழியாக, அதைக் கடந்துதான் நாம் வானத்தைப் பார்க்கிறோம். நம்மை மிக நெருங்கியிருக்கும் ஒரு ஆதாரப் புள்ளியான சந்திரன் பரந்த வானின் பின்புலத்தில் பூமியைச் சுற்றி வரும்போது 12 அமாவாசைகளும், 12 பவுர்ணமிகளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக ஏற்படுவதை கணக்கில் கொண்டுதான் நம்முடைய பனிரெண்டு ராசிகள் உருவாகின. சந்திரனின் இருப்பை வைத்துதான் நட்சத்திரக் கூட்டங்களைக் கணிக்கிறோம் என்பதால், நிலவு பூமியைச் சுற்றி வரும் இருபத்தி ஏழரை நாட்கள் கொண்ட ஒரு முழுச் சுற்று 27 நட்சத்திர கூட்டங்களாகின.

ஜோதிடம் என்பது ஒளியைப் பற்றிச் சொல்வது என்பதை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். ஒளியைப் போலவே கவனிக்கக் கூடிய இன்னொன்று, ஈர்ப்பு விசை எனப்படும் மகத்தான ஆற்றல். சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்கள் அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. அதனால் நிலா போன்ற துணைக் கோள்கள் மூலக்கிரகங்களைச் சுற்றி வருகின்றன.

கதிரவனால் பிறந்த கிரகங்களின் ஈர்ப்பு விசையாகட்டும், அவற்றின் ஒளியாகட்டும் அனைத்திற்கும் மூல காரணம் சூரியன்தான். சூரிய ஒளி, அதனை பிரதிபலிக்கும் சந்திர ஒளி, மற்ற கிரகங்களின் ஒளி மற்றும் இவை அனைத்துக்குமான ஈர்ப்பு விசைகளும் இணைந்தே பூமியில் உயிரினத்தை உருவாக்கி அவற்றின் வாழ்க்கை முறைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதுதான் ஜோதிடம்.

உயிர் உருவாவதற்கு சூரிய ஒளியும், அதனை வாங்கிப் பிரதிபலிக்கும் சந்திரக் கதிர்களும், குரு கிரகத்திடம் உள்ள மீத்தேன் ஒளியும் அவசியமானது. குருவிடம் அதிகமாக உள்ள மீத்தேனால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றின என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் சந்திரனை மாதாகாரகன் என்றும், குருவை புத்திரகாரகன் என்று வகைப்படுத்திச் சொன்னது.

தற்போது நாம் பின்பற்றி வரும் பஞ்சாங்கங்களில் உள்ள ராகுகாலம், எமகண்டம் போன்றவைகள் ஒரு முழுமையான விஞ்ஞானம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பலவிதமான வானியல் உண்மைகளே இன்றைய ஜோதிட சாஸ்திரம் கூறுகின்ற அடிப்படை விதிகள் ஆயின. பூமியின் சுழற்சியாலும், சந்திரனின் சுழற்சியாலும் மனிதனின் மேல் அவ்வப்போது ஏற்படும் எதிர்மறை சக்திகளையே ஜோதிடம் விஷகாலம், ராகு காலம், எமகண்டம் என்று பெயரிட்டுச் சொன்னது.

இந்திய ஜோதிடத்தின் இரண்டரை நாழிகை அளவுள்ள ஹோரை எனப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு காலஅளவுதான் இங்கிருந்து ஏற்றுமதியாகி ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்பட்டு நமக்கே திரும்பி வந்து இறக்குமதி ஆனது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

குழந்தைக்கு பெயர் சூட்ட

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற நம் வாழ்வில் கிடைக்கும் பதினாறு பேறுகளில் நன் மக்கட்பேறே மிகச் சிறப்பானதாகும். அறிவிற்சிறந்த, நற்பண்புடன் கூடிய பிள்ளைகளைப் பெறுவது என்பது மாபெரும் வரம் அல்லவா? அப்படி, தவமாக தவமிருந்து பெற்றெடுக்கும் குழந்தைச் செல்வம் என்பது எத்தகைய பாக்கியமோ, அதேபோன்று அந்த குழந்தைக்கு   நல்லதொரு பெயர் அமைவதும் பெரும் கொடுப்பினை ஆகும்.

குழந்தை பிறந்தவுடன், எந்தப் பெயர் வைத்தால் அக்குழந்தையின் வருங்காலம் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக அமையும் என்று ஆய்வு செய்வதும், சிறப்பான பெயர் அமையவேண்டும் என்பதும் பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதைப் பூர்த்தி செய்யவே இந்த கட்டுரை.
ஜென்ம நட்சத்திரப்படி பெயர் சூட்டுவது, நட்சத்திர நாம எழுத்துப்படி பெயர் வைப்பது, நியூமராலஜிப்படி பெயர் வைப்பது என பல வழிகள் உண்டு. குழந்தை பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைப்பதே தொன்றுதொட்டு இருந்துவரும் மரபாகும். 
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு ‘நாம நட்சத்திர’ எழுத்துக்கள் உண்டு. அதன்படி பெயர்  அமைப்பது  விசேஷமாகும்.

பஞ்சாங்கத்தில் நாம நட்சத்திர எழுத்து என்று இருக்கும். அதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு நான்கு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கும். அந்த எழுத்தில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைத்துக்கொள்ளலாம். 

குறிப்பாக, ஒருவரது பிறந்த நட்சத்திரம் அசுவினி என்று எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. அசுவினியைப் பொறுத்தவரையிலும் முதல் பாதத்துக்கு ‘சு’ என்ற எழுத்தும், 2-ஆம் பாதத்துக்கு ‘சே’ என்ற எழுத்தும், 3-ஆம் பாதத்துக்கு ‘சோ’ என்ற எழுத்தும், 4-ம் பாதத்துக்கு, ‘லா’ என்ற எழுத்தும் நட்சத்திர எழுத்தாக வரும். அதன்படி, ஒருவர் அசுவினி 1-ஆம் பாதத்தில் ஜனித்தவர் என்றால், அவருடைய பெயரின் முதல் எழுத்து, ‘சு’ என்று ஆரம்பித்தால் சிறப்பாகும். இப்படி ஒவ்வொரு நட்சத்திர பாதத்துக்கும் ஏற்றப்படி பெயர் முதல் எழுத்தை அமைத்துக் கொள்வது  விசேஷமாகும். 

அதேபோல், ஒருவர் தம் மூதாதையரின் பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். மிகச் சிறந்த அறிஞர்கள், வாழ்வில் வளம் பெற்றவர்கள், முக்கியஸ்தர்களாக இருந்தவர்கள் ஆகியோரது பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். 

அடுத்து, பிறந்த தேதியின் அடிப்படையில் பெயர் சூட்டுவது குறித்து அறிவோம். பிறந்த தேதியின் எண்ணே பிறவி எண் ஆகும். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் ஒற்றை எண்ணே ‘விதி  எண்’ ஆகும். பிறவி எண்ணும், விதி எண்ணும் விதிப்படியே நமக்கு அமையும். அவற்றை நாம் தேடிப் பெற முடியாது; மாற்றிக்கொள்ளவும் முடியாது. அவை இயற்கையாக, நம் முன்ஜன்ம புண்ணிய, பாவ கர்மாக்களைக் கொண்டு அமைவதாகும். பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான எண்ணை நம் பெயர் எண்ணாக வைத்துக் கொண்டால்  அதிர்ஷ்டத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். அதாவது, பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான நட்பு  எண்ணைப் பெயர் எண்ணாக அமைப்பார்கள்.
ஆஸ்ட்ரோ  நியூமராலஜிபடி-  ஜாதகத்தில் அக்குழந்தையின் பிறந்த தேதி, மாத, வருட, நேரத்தைப் பொறுத்து... ராசி, லக்னப்படி எந்தக் கிரகம் வலுவாக, யோக பாக்கியங்களைத் தரும் நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அந்தக் கிரகத்தின் எண்ணைப் பெயர் எண்ணாக அமைத்துக்கொள்வதும் அதற்கேற்ற பெயரை தேர்வு செய்வதும் சிறப்பு.

உதாரணமாக, பிறவி எண் 1-ஆகவும், விதி எண் 3-ஆகவும் உள்ள ஒருவருக்கு பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. இந்த மூன்று எண்களில், எண் 1-க்கு உரிய சூரியன், 3-க்கு உரிய குரு, 9-க்கு உரிய செவ்வாய் ஆகிய கிரகங்களில் எந்தக் கிரகத்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என ஆராய்ந்து, அந்த கிரகத்துக்கு உரிய எண் பெயர் எண்ணாக வரும்படி  பெயரை  தேர்வு செய்வதால், வாழ்வில் சுபிட்சம் கூடும்; சுப பலன்கள் அதிகம் கிடைக்கும்.
ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறுக்கும் உரிய எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 
A I J Q Y - 1. 
B, K, R - 2, 
C, G, L , S - 3. 
D, M, T - 4.  
E, H, N, X - 5.
U, V, W - 6. 
O, Z - 7, 
F, P - 8. 
இந்த எழுத்துக்களைக் கொண்டு ஒருவரது பெயர் எண்ணை அறியலாம். இந்த எண்கள் சீரோ முறைப்படி தரப்பட்டுள்ளன.
குழந்தையின் பெயர் இனிஷியலுடன் (தகப்பனார் பெயரின்  முதல் எழுத்து) சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அசுவினி 1-ஆம் பாதத்தில் பிறந்த குழந்தைக்குப் பெயரின் முதல் எழுத்து ‘சு' என வருவது நாம நட்சத்திர  எழுத்தாகும். குழந்தையின் அப்பாவின் பெயர் தர் எனக் கொள்வோம். குழந்தையின் பெயர் சுப்பிரமணியன் என்றால்
S. SUBRAMANIAN என்ற பெயர் வரும். 

S. S U B R A M A N I A N

3  3 6 2 2 1 4 1 5 1 1 5 =34 வரும்.  
பெயரின் கூட்டு ஒற்றை எண் 7 ஆகும். பெயரின் கூட்டு ஒற்றை எண் 2, 4, 7, 8-ஆக அமைவது கூடாது. பிறவி எண்: குழந்தை பிறந்த தேதி 30-12-2014 எனக் கொள்வோம். குழந்தை பிறந்த தேதி எண் 3. அதாவது  30-ன் ஒற்றை எண். இது, குருவுக்கு உரிய எண். விதி எண்: 4. இது ராகுவின் எண். 
பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. சிலர், குலப் பெயரையும் சேர்த்துக்கொண்டு பெயர் அமைப்பார்கள். ஆகவே, அதற்குரிய எண்களையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பது நல்லது. 
அதேபோன்று சில பொதுவான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, பெயரில் ash, thi என்று வராமல் இருப்பது சிறப்பாகும். பெயர் ‘A’ என்ற எழுத்தில் முடிவது விசேஷமாகும். 

ஜாதகப்படி எந்த எண்ணுக்கு அதிக பலம் உள்ளது என்பதை அறிந்து, அந்த எண்ணில் குழந்தையின் பெயர் அமைவது  விசேஷ மாகும். லக்னப்படி பார்ப்பதே நல்லது. 
பெயர் கூட்டு எண் 1=ஆக வருமானால் 37-ம் 46-ம் விசேஷமானவை. 
3-ஆக வருமானால் 21, 30, 66 விசேஷமானவை.

5-ஆக வருமானால் 23, 32, 41 அதிர்ஷ்டமானவை. 

6-ஆக வருமானால் 24, 33, 42 விசேஷமானவை. 

9-ஆக வருமானால் 27, 45, 54, சிறந்தவை. 
பொதுவாக பிறவி எண் (பிறந்த தேதி எண்ணின் ஒற்றை எண்), விதி எண் (பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் கூட்டு ஒற்றை  எண்) பெயர் எண் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று நட்பாக இருப்பது விசேஷமாகும். அப்படி அமையப் பெற்றவர்கள் பெரும் தனவான் ஆவார்கள். சகல பாக்கியங்களும் அவர்களுக்குக் கிடைக்கும். முக்கியஸ்தர் ஆக முடியும்.
பிறவி எண், விதி எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் ஜாதகத்திலும் சிறப்பான நிலையில் இருப்பார்களானால் இரட்டிப்பு நற்பலன்கள் உண்டாகும். 
 
இனி, 27 நட்சத்திரங்களுக்கும் உகந்த பெயர் முதல் எழுத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அசுவினி:  கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பரணி:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
கிருத்திகை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
ரோகிணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
மிருகசீரிஷம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
திருவாதிரை:  இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
புனர்பூசம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பூசம்: இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
ஆயில்யம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
மகம்:  இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்
பூரம்:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்  நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
உத்திரம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அஸ்தம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
சித்திரை: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சுவாதி: இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
விசாகம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அனுஷம்: இதில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
கேட்டை: இதில் பிறந்தவர்களுக்கு புதன்  நட்சத்திர அதிபதி.  நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவை.
மூலம்: இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
பூராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி.  கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
அவிட்டம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி. க, கி, கு, கே ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு  நட்சத்திர அதிபதி ஆவார். கோ, ஸ, ஸி, ஸு ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.
பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு  நட்சத்திர அதிபதி. ஸே, ஸோ, த, தி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திரட்டாதி:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி. து,ஸ, ச, த ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
ரேவதி: இதில் பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. தே, தோ, ச, சி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.

சஷ்டி திதி சிறப்பு

சஷ்டி திதியில் என்னென்ன செய்யலாம்?
சஷ்டியின் சிறப்புகள்.!

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட காலக்கணிப்பில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் சஷ்டி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது. திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

சஷ்டியின் சிறப்புகள் :

👉 சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டி ஆகும். இந்த கந்த சஷ்டி விழாவானது முருகக்கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.

👉 சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.

👉 சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

👉 சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

வியாழன், 5 ஏப்ரல், 2018

இந்து சாஸ்திரங்கள்

இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுபோன்ற சடங்குகளையும், நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷயங்கள், வீடு கட்டுவது, தொழில் துவக்கம் முதலான நற்காரியங்களையும் உரிய நாட்களைத் தேர்வு செய்து அன்று ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அவை தரும் விளக்கங்களின்படி, எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் நிகழ்த்தலாம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்?
தந்தை குழந்தையின் பெயரை அதன் காதில் மூன்று முறை கூறவேண்டும். அப்போது உறவினர்கள் அதை திரும்பச் சொல்லவேண்டும். அந்த தருணத்தில் குழந்தையின் உள்ளங்கையில் தங்கக்காசு ஒன்றை வைப்பார்கள். குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16ம் நாளில் பெயர் சூட்டலாம்.
பெயர் சூட்டுவதற்கு உகந்த சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.
திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14வது திதிகள்) அஷ்டமி தவிர மற்றவை.
நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.
யோகம்: விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி தவிர பிற யோகங்கள் சிறந்தவை.
கரணம்: சகுனி, விஷ்டி தவிர பிற கரணங்கள் சிறந்தவை.
மேற்கண்ட யோகம் மற்றும் கரணம் அனைத்தும் சுப காரியங்களுக்கும் விலக்கப்பட்டவை. இவை தவிர மற்ற யோகங்கள், கரணங்கள் மற்றும் கிழமைகள் சிறந்தவை.
மேலும் மேற்கண்ட பஞ்சாங்க விஷயங்கள் அல்லாமல் சடங்கு வைக்கும் நாளில் பஞ்சக சுத்தி, ஜாதகரின் ஜாதகத் தன்மை, கிரகண தோஷங்கள், சங்கராந்தி மற்றும் சந்தியாகாலம் போன்றவற்றையும் கவனித்து முகூர்த்தம் குறிக்கவேண்டும்.
அன்ன ப்ராசனம் எப்போது?
இது குழந்தைக்கு முதல் முறையாக திட உணவு ஊட்டும் சடங்கு. ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10வது மாதங்களிலும், பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11வது மாதங்களிலும் இந்தச் சடங்கை செய்யலாம்.
திதி: 2, 3, 5, 7, 10, 13 அல்லது பௌர்ணமி சிறந்தது.
நட்சத்திரம்: அனைத்து சர, சாது, ஸ்திர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
முடி காணிக்கை எப்போது செலுத்தலாம்?
இது முதல்முறையாக முடி காணிக்கை செலுத்தும் சடங்கு ஆகும். இதை நிகழ்த்துவதற்கு 2, 3, 5, 7, 10, 11 அல்லது 13ம் திதி சிறந்தது.
நட்சத்திரம்: சர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
காது குத்துதல்
திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14) 8 மற்றும் அமாவாசை தவிர மற்றவை.
நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள், புனர்பூசம், திருவோணம் மற்றும் அவிட்டம் சிறந்தவை.
புத்தாடை அணிய உகந்த நேரம்...
திதி: ரிக்தா திதிகள் மற்றும் அமாவாசை தவிர மற்றவை.
நட்சத்திரம்: சர, ஸ்திர, சாது, துரித மற்றும் விசாகம் சிறந்தவை.
பிறந்த நாள் கொண்டாட்டம்
நாம் பிறந்த ஆங்கில தேதி அல்லது தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது. நாம் பிறந்த சந்திரமான மாதம் மற்றும் நட்சத்திர நாளில்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
பஞ்சாங்கங்களில் சைத்ர, வைசாக, பால்குன என சந்திரமான மாதங்களைக் காணலாம். தமிழ் வருட பங்குனி மாத அமாவாசை முடியும் நேரத்தில் சந்திரமான சைத்ர மாதம் தொடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமாவாசைகளில் அடுத்தடுத்த மாதங்கள் தொடங்கும். இந்த சந்திரமான மாதத்தையும் ஜனன நட்சத்திரத்தையும் ஜாதகரின் ஜாதகத்தில் குறித்துத் தருவது புண்ணியமாகும்.
சில நேரங்களில், ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டு ஒரே பெயரில் இரண்டு சந்திரமான மாதங்கள் ஏற்பட்டுவிடும். இதில் முதல் மாதத்தை அதிக மாதம் என்றும், மற்றொன்றை நிஜ மாதம் என்றும் சொல்வர். இந்நிலையில் நிஜமாதத்தில் வரும் ஜனன நட்சத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும். பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில்  பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி.
மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ் ஜெயன பூஜை செய்யவேண்டும்.
பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.
ஞாயிறு: நீண்ட தூர பயணம்
திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி
செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்
புதன்: கல்வியில் ஆர்வம்
வியாழன்: ஆடை ஆபரணச் சேர்க்கை
வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.
சனி: பெற்றோருக்கு பாதிப்பு.
பிறந்த நாளில் உபநயனம், திருமணம், மருத்துவ சிகிச்சை, முதலியவற்றை செய்யக் கூடாது. பிறந்தநாள் எந்த கிழமைகளில் அமைகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகத்தை வழிபட, குறைகள் நீங்கி நிறைகள் கூடும்.
வித்யாரம்பம்
திதி: ரிக்தா திதிகள், 8 மற்றும் 15 தவிர மற்றவை சிறந்தவை.
நட்சத்திரம்: சர, சாது, துரித நட்சத்திரங்களும் ரோகிணி, திருவாதிரை, உத்திரம் மற்றும் விசாகமும் சிறந்தவை.
விற்பனை மற்றும் வர்த்தகம் குறித்த விவரங்கள்
மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடல் மற்றும் செயல்படல், ஒப்பந்தங்களில் கையெழுத் திடல், விளம்பரப்படுத்துதல் போன்றவற்றையும் உரிய திதி, நட்சத் திரங்களில் துவங்குவது விசேஷம்.
திதிகள்: 1, 2, 3, 5, 7, 10, 11, 13 மற்றும் பௌர்ணமி சிறந்தது.
நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
புதிதாக கடை திறப்பதற்கு, ரிக்தா மற்றும் கிருஷ்ணபட்ச அஷ்டமி தவிர மற்ற திதிகள் சிறந்தவை. சாது, துரித நட்சத்திரங் கள் சிறந்தவை.
மருத்துவம்...
ஜனன நட்சத்திரம் அல்லது அதற்கு 3, 5 அல்லது 7வது நட்சத்திர தினங்களில் (ஜன்ம, விபத்து, ப்ரத்யக், வதம்) உடல்நலம் பாதித்தால் மிக கவனத்துடன் சிகிச்சை பெற வேண்டும்.
பய மற்றும் உக்கிர நட்சத்திர நாட்களில் உடல்நலம் பாதிக்கக் கூடாது. மேலும் மேற்படி நட்சத்திர நாட்களுடன் சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமையும் அமைந்துவிட்டால் மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். நாட்பட்ட பிணிகளுக்கு சர, ஸ்திர, சாது மற்றும் துரித நட்சத்திரங்களில் சிகிச்சை பெற துவங்குவது சிறப்பு.
வழக்கு தொடுத்தல்
உரிமையை நிலைநாட்டுவதற்காக வழக்குகள் தொடுக்கும் அன்பர்கள் ரிக்தா திதி தவிர மற்ற திதிகளைத் தேர்வு செய்யலாம். சாது, துரித, ஸ்திர நட்சத்திரங்கள், ரோகிணி, உத்திரம், அவிட்டம் சிறந்தவை.
கடன் வாங்குதல்
நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்கா கவும் கடன் வாங்கும்போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம் தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் ஆகாது.
வீடு பழுது பார்க்க...
திதி: ரிக்தா திதி தவிர மற்றவை சிறந்தவை.
நட்சத்திரம்: கார்த்திகை, பூசம், மகம், பூரம், அஸ்தம், மூலம் மற்றும் ரேவதி தவிர மற்றவை. மேலும் கோச்சாரத்தில் மேற்படி நட்சத்திரங்களில் செவ்வாய் பயணிக்கும் காலமும் ஆகாது.
வெள்ளிக்கிழமையில் ரிஷபம் அல்லது துலாம் லக்னம்; திங்கள் கிழமையில் கடகம் லக்னம் அமையும் நேரத்தில் பழுது பார்க்கத் தொடங்க வேண்டும்.
பயணம் வெற்றி பெற...
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் பயணத்தைத் தவிர்க்கவும். மேலும் செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கு திசையும்; திங்கள், சனியில் கிழக்கும்; வியாழனன்று தெற்கும்; ஞாயிறு, வெள்ளியில் மேற்கும் ஆகாது.

கால சர்பதோசம்

ஒவ்வொருவரின் ஜாதக நிலைப்படி அவரது எதிர்காலம் கணக்கிடப்படும்.அதோடு அவருக்கு ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? இதனால அவருக்கு எத்தகைய பாதிப்புகள், எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை நம்மால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாரும்  கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. முதலில் நாக சர்ப தோஷம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம் வரும், வந்தால் என்ன பலன் போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற பயங்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
#1
ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். இதில் ராகு என்பது காலனையும், கேது சர்ப்பத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.
இப்படி ராகு கேதுவுக்கு இடையில் ஏழு கோள்களும் இருக்கக்கூடிய காலத்தை சர்ப்ப காலம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்போது பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
#2
உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் இருந்து மற்ற கட்டங்கள் காலியாக இருந்தால் மட்டுமே அவை நாக சர்ப தோஷமாகும். எதாவது ஒரு கிரகம் விலகியிருந்தால் கூட அவை நாக சர்ப தோஷம் ஆகாது.
இவற்றில் கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கிறார்கள். இதற்கேற்ற பலன்களும் இருக்கிறது.

#3
முதல் வகை அனந்த கால சர்ப்ப தோஷம். ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். அதாவது முதலாவதும் கடைசியுமாக ராகு கேது இருந்தால் அதற்கு பெயர் அனந்த கால சர்ப்ப தோஷம்.
இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். அதன் பிறகான வாழ்க்கை அமைதியாய் அமைந்திடும்.
Image courtesy
#4
இரண்டாம் வீட்டில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் . இவர்களுக்கு பூர்வீக சொத்து நிலைக்காது,தொடர்ந்து உடல் நிலையில் எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு.
பொருளாதரப் பின்னடைவு ஏற்படக்கூடும்.
Image Courtesy
#5
ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இது மனபலத்தை கெடுக்ககூடியது. அதனால் இவர்களால் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சகோதரர்களுக்கிடையில் விரோதப் போக்கு ஏற்படும்.
Image Courtesy
#6
சங்கல்ப கால சர்ப்ப தோஷம் என்றால் நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேதுவுமிருக்க வேண்டும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
திருமணத்திற்கு வெளியே ஏற்படுகிற உறவுமுறையினால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Image Courtesy
#7
ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் விழும் .
48வயதுக்கு பிறகு இவர்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.
Image Courtesy
#8
மஹா பதம கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருப்பார்கள். இது இளமைக்காலத்தை விட பிற்காலத்தில் தான் சிறந்த பலனை அளிக்கக்கூடியது. அதிகார பதவி, புகழ், அந்தஸ்த்து ஆகியவற்றை கிடைக்கச் செய்திடும்.
புகழின் உச்சியில் ஏற்றிவிடும் அதே சமயம் நம்மை அதளாபாதாளத்திற்கும் கொண்டு செல்லக்கூடியது இது. இவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும்.
Image Courtesy
#9
ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம்.இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.
Image Courtesy
#10
எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. குறிப்பாக தந்தை வழி சொத்தினை தவிர்ப்பது நலம். அதனை அடைய ஆசைபட்டு பல்வேறு தவறான செயல்களை செய்ய வைத்திடும்.
Image Courtesy
#11
சங்ககுட கால சர்ப்பதோஷம் என்பது ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சொல்லக்கூடியது. இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
Image Courtesy
#12
10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது என இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் வேலை செய்யும் இடத்தில்,தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனைகள் உருவாகிடும். பத்தாம் வீட்டில் ராகு இருப்பதால், வெளிச்சம் இல்லாத தொழில் அமையும். அதாவது ஒளியைக் கொண்டு வேலை செய்வது போல புகைப்படம் எடுப்பது, எக்ஸ்ரே போன்றவை.
அதோடு இந்த தோஷத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு தண்டனை பெறக்கூடிய சூழல்கள் உருவாகும்.
Image Courtesy
#13
பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும்.
Image Courtesy
#14
பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே சமயம் இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பர்.
Image Courtesy
#15
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.
Image Courtesy
#16
கனவில் இறந்த மூதாதையர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். சில நேரத்தில் நம்மை யாரோ தாக்க வருவது போலேயோ அல்லது கொலை செய்வது போலேயோ தோன்றலாம். தண்ணீர் நிரம்பிய இடங்கள் அடிக்கடி நினைவில் வந்து போகும். இப்படி உங்கள் கனவில் தொடர்ந்து ஏதாவது வந்து கொண்டிருந்தால் இதனை கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
Image Courtesy
#17
இது முன் ஜென்மத்தில் செய்த வினையால் ஏற்படுகிறது. முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும்.